நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 6 மார்ச், 2012

மரணம் வரை நீதிக்காக போராடுவேன்! – ஸாகியா ஜாஃப்ரி உறுதி!


அஹ்மதாபாத் : குஜராத் இனப்படுகொலையின் போது கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சியின் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி தனது 73-வது வயதிலும் நீதிக்கான போராட்டத்தை தொடர்கிறார். மரணம் வரை போராடுவேன் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அவர் உள்ளார்.
zakia jafri
வழக்கை குறித்தும், நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை குறித்தும் மாத்யமம் நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
கேள்வி:2002-ஆம் ஆண்டு இனப்படுகொலையை குறித்து பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தி வருகின்றன. ஆனால், யார் பொறுப்பு என்பது குறித்து தெளிவாக கண்டுபிடிக்க முடியவில்லை. பாதிக்கப்பட்டவர் மற்றும் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கை நடத்தி வருபவர் என்ற அடிப்படையில் இனப்படுகொலைக்கு யார் பொறுப்பு என நீங்கள் கருதுகின்றீர்கள்?
ஸாகியா:இனப்படுகொலையில் நேரடியாக அடியாட்கள் உபயோகிக்கப்பட்டனர். பல தலைமுறைகளாக தங்களுடன் வசித்த அண்டை அயலாரை அவர்கள் படுகொலைச் செய்தனர். ஆனால், உண்மையான குற்றவாளிகள் மோடியின் அரசு ஆகும். அரசு கையை கட்டிக்கொண்டு பார்வையாளராக மாறியது இனப்படுகொலை பரவ காரணமானது.
நான் உச்சநீதிமன்றத்தில் அளித்த புகாரில் நரேந்திரமோடி மற்றும் 61 நபர்கள் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் என குறிப்பிட்டிருந்தேன். எனது புகாரின் அடிப்படையில் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.
குல்பர்க் சொஸைட்டியில் எனது வீடு அஹ்மதாபாத் போலீஸ் கமிஷனரின் தலைமையகத்திற்கு அருகே உள்ளது. ஆயுதம் ஏந்திய கும்பல் எங்களின் வீட்டை சுற்றி வளைத்தபோது. இஹ்ஸான் எல்லா மூத்த போலீஸ் அதிகாரிகளையும் உதவிக்காக அழைத்தார். மோடியை கூட உதவிக்கு அழைத்தார். மாநில அரசுக்கு தெரியாமல் கூட்டுப் படுகொலை நடந்திருக்க முடியாது.
கேள்வி:இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை தண்டிக்க அரசு ஏதேனும் நடவடிக்கை மேற்கொண்டதா?
ஸாகியா:குற்றவாளிகளை தண்டிக்க ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளிகளை கைது செய்து தண்டிப்பதற்கு பதிலாக மோடி அரசு அவர்களை பாதுகாக்கவே முயற்சிக்கிறது.
குல்பர்க் சொஸைட்டி கூட்டுப் படுகொலை வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக சேதன் சவுகானை நியமித்ததை இதற்கு உதராணமாக கூறலாம்.
1986-87-ஆம் ஆண்டில் மேகனி நகர் வகுப்பு கலவரத்தின் போது ஒன்பது பேரை தீவைத்து கொளுத்தி படுகொலைச் செய்தவர் என்ற குற்றச்சாட்டை சந்திக்கும் வி.ஹெச்.பியை சார்ந்தவர்தாம் சவுகான்.
குல்பர்க் சொஸைட்டி வழக்கில் கைதானவர்களின் ஜாமீன் மனுவை அரசு தரப்பு வழக்குரைஞரான சவுகான் எதிர்க்காமல் இருந்ததால் குற்றவாளிகளான ஹிந்துக்களுக்கு ஜாமீன் கிடைத்தது. அதே வேளையில், கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களின் ஜாமீன் மனுவிற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜாமீன் கிடைக்கவில்லை.
கேள்வி:மோடியின் ஸத்பாவனா உண்ணாவிரதப் போராட்டத்தை பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
ஸாகியா:மோடியின் ஆட்சியின் கீழ் இவ்வளவு வன்முறைகள் நிகழ்ந்த பிறகு ஸத்பாவனா உண்ணாவிரதம் இருப்பதன் பொருள்தான் என்ன? இவையெல்லாம் வெறும் அரசியல் ஆதாயத்திற்காகவே நடத்தப்படுகிறது. எல்லா சமுதாயங்களின் ஆதரவு உண்டு என்பதை காண்பிப்பதே மோடியின் முயற்சி.
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடந்த உடன் உண்ணாவிரதம் மேற்கொண்டு அமைதி காக்க கோரிக்கை விடுத்திருந்தால் அதில் பொருள் உள்ளது. ஆனால் மோடி கலவரத்தை தூண்டினார்.
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகே மோடி அடக்கி வைக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி(பா.ஜ.க) ஆட்சியில் தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை கூற இயலவில்லை.
கேள்வி:உங்களின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அறிக்கையின் நகலை நீதிமன்றம் யாருக்கும் அளிக்கவில்லை என்ற போதிலும் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஸாகியா:மோடிக்கும் இதர நபர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்க ராகவன் யார்? நீதிமன்றம் தான் நற்சான்றிதழ் வழங்கவேண்டும். எஸ்.ஐ.டியின் அறிக்கைக்காக காத்திருக்கிறேன்.
கேள்வி:நீதி கிடைக்கும் என்று கருதுகின்றீர்களா?
ஸாகியா:ஆம். நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். நீதி கிடைக்க முடிந்தவரை முயற்சிப்பேன். மாநில அரசுக்கும், நாட்டின் மிகவும் வலிமையான முதல்வருக்கும் எதிராக நான் போராட்டம் நடத்துகிறேன். எனக்கு தற்போது 73 வயது ஆகிறது. உயிர் வாழும் காலம் வரை எனது போராட்டம் தொடரும்.
கேள்வி:10 வருடங்கள் கழிந்த பிறகும் வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதுக்குறித்து?
ஸாகியா:உண்மைதான். இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நிறுவ வேண்டும். இந்த வயதில் எனக்கு அனைத்து ஆவணங்களையும் சேகரிக்க முடியவில்லை. ஆகவே வார்த்தைகள் மூலமான ஆதாரங்களையும் பரிசீலிக்க வேண்டும்.
முஸ்லிம்களை பாதுகாக்காதீர்கள் என்று மோடி கட்டளையிட்ட ஆவணத்தை கண்டுபிடிக்க என்னால் முடியாது. ஆனால், பல போலீஸ் அதிகாரிகளும் இக்கருத்தை முன்வைத்துள்ளனர். இதனை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம்.
கேள்வி:நீதிக்கான போராட்டத்தில் மிக அதிகமாக உதவியது யார்?
ஸாகியா:டீஸ்டா ஸெடல் வாட்
கேள்வி:மூன்று வருடங்களுக்கு முன்பு அறிவித்ததை போல குல்பர்க் சொஸைட்டியை அருங்காட்சியமாக மாற்றுவது குறித்து?
ஸாகியா:நிலங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அது சாத்தியமாகும் என்று கருதவில்லை. இங்கு வசிக்கும் பலரும் ஏழைகள் ஆவர். அவர்களுக்கு தங்களுடைய சொந்த நிலத்தை விட்டுக்கொடுப்பது இயலாத ஒன்று. அதற்கு பதிலாக சொஸைட்டியின் பொதுவான இடத்தில் நூலகம், க்ளீனிக் ஆகியன அடங்கிய ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பலாம் என கருதுகிறோம்.
நன்றி:மாத்யமம்.