நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 22 அக்டோபர், 2012

குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் !நீதிக்கான முழக்கம் - கோவை மண்டல மாநாடு : கோவை பகதூர்ஷா திடலில் திரண்ட மக்கள் வெள்ளம்

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! என்ற முழக்கத்தோடு " குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் - நீதிக்கான முழக்கம் " என்ற தலைப்பில் கோவை மண்டல மாநாடு 21 .10 .2012 அன்று கோவையில் போத்தனூர் ரோடு - மைல்கல்லில் பகதூர்ஷா திடலில் வைத்து நடைபெற்றது.
இம்மாநாட்டில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் , மாநில தலைவர் ஏ.எஸ் . இஸ்மாயீல் , எஸ்.டிபி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் முபாரக் , பி.யு.சி.எல் துணை தலைவர் க.குறிஞ்சி , ஆல் இந்தியா இமாமஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி. மஹபூப் அன்சாரி பைஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மிகவும் குறுகிய காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கோவை மண்டல மாநாட்டிற்கு மழை, குளிர் எதையும்பொருட்படுத்தாது நீதியை சுவைத்தே தீர வேண்டும் என்ற வேட்கையுடன் பல்லாயிரக்கணக்கான பெண்களும்,ஆண்களும் கலந்து கொண்டது காண்போரை வியக்க வைத்தது.குறிப்பாக ஆண்களை விட பெண்கள் மாநாடு துவங்கும் சில மணி நேரங்களுக்கு முன்பே மாநாட்டு திடலில் கூடிமுஸ்லிம்களுக்கு எதிராக சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் அரச பயங்கரவாதம், பாசிஸ்டுகளின்திட்டமிட்ட இனப்படுகொலை, UAPA போன்ற கருப்புச் சட்டங்கள் அனைத்திலும் நேரடியாக பாதிக்கப்படுவது நாங்களும் எங்களுடைய சகோதரிகளும்தான் என்பதை பறைசாற்றினர்.இறைவனின் மாபெரும் உதவியைக் கொண்டு அடை மழைக்காலத்திலும் மாநாடு தொடங்கி முடியும் வரைவானிலையும்,மழையும் ஒதுங்கி நின்று மாநாட்டை பிரமிப்புடன் பார்த்துச் சென்றது. இறைவனுக்கே புகழனைத்தும்!
சரியாக மாலை 5 மணிக்கு ஒற்றுமை கீதத்துடன் மாநாடு துவங்கியது. துவக்கமாக பாப்புலர் ஃப்ரண்டின் கோவை மாவட்ட தலைவர் ராஜா உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர்தனது வரவேற்புரையில் " குறுகிய காலத்தில் ஒரு மாநாடை ஏற்பாடு செய்யும் போது ஏற்படும் கஷ்டங்களையும்,காவல்துறை, உளவுத்துறையின் தடைகளையும் கோடிட்டு காட்டியதுடன் இவை அனைத்தையும் தாண்டிவரும் சக்தி பாப்புலர் ஃப்ரண்டிற்கு உண்டு " என்பதை வெளிப்படுத்தினார்.
பாப்புலர் ப்ரண்டின் மாநில துணைத்தலைவர் மற்றும் விடியல் வெள்ளி ஆசிரியர் மு.முஹம்மது இஸ்மாயீல்


பின்னர் தலைமையுரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணை தலைவர் முஹம்மது இஸ்மாயில் தனது உரையில் “இப்போது இந்தியாவில் முஸ்லிமாக இருப்பதுதான் ரொம்ப ரிஸ்க்கான விஷயம்” (அருந்ததி ராய் சொன்னது) , “இந்தியாவில் முஸ்லிமாக இருப்பது குற்றமா?” (பிருந்தா காரத் பாராளுமன்றத்தில் சொன்னது) , “இந்தியாவில் எப்படி முஸ்லிமாக வாழ்வது” (டெல்லியில் நடந்த கருத்தரங்கத்தின் தலைப்பு) போன்றவற்றை கோடிட்டு காட்டி சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு மேற்கூறப்பட்டவைதான் சான்று என்றார். இந்நிலை மாறுவதற்காக வேண்டிதான் பாப்புலர் ஃப்ரண்ட் போராடி கொண்டிருக்கின்றது " என்றார்.
ஆல் இந்தியா இமாமஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி. மஹபூப் அன்சாரி பைஜி

பின்னர் உரையாற்றிய ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின்மாநில செயற்குழு உறுப்பினர் மஹபூப் அன்ஸாரி பைஜி தனது உரையில் " நாம் கூடியிருக்கும் இந்த மாதம் துல்ஹஜ் மாதம். ஹஜ் எனும் கடமையை நிறைவேற்ற முஸ்லிம்கள் இறையில்லத்தில் சங்கமித்துக்கொண்டிருக்கின்றனர். ஹாஜிகள் நீதிக்கான முழக்கத்திற்காகத்தான் ஒன்று கூடுகின்றார்கள். அதே நீதிக்கான முழக்கத்திற்காக நாம் இங்கு கூடியிருக்கின்றோம். நீதியை, மனித இனத்தை பாதுகாக்க நாம்இங்கு கூடியுள்ளோம். நபி (ஸல்) அவர்கள் அதற்காகத்தான் போராடினார்கள்.
‘ஹஜ்ஜதுல் விதா’ வில் தனது இறுதியுரையில் நபி (ஸல்) விடுத்த அறைகூவல் உலகில் இதுவரையிலும் கேட்கப்படாத இனிமேலும் கேட்க முடியாத உரையாகும். சமூக தீமைகளை மாற்ற விடப்பட்ட அறைகூவல் அது. அரஃபா பெருவெளியில் லட்சக்கணக்கான ஹாஜிகள் முன்னணியில் இப்படி கூறினார்கள். “கேளுங்கள், உங்கள் தோழரின் இரத்தம், பொருளாதாரம், மானம் அனைத்தும் உங்களுக்கு ஹராமாகும்.” நீதியை நிலை நிறுத்துங்கள் என்றார்கள். அவர்கள் நீதியை நிலை நிறுத்திவிட்டு, செயல்படுத்திக் காட்டி விட்டுஇது போன்று செயல்படுங்கள் என்றார்கள். இன்று அந்தக் கடமை நம்முன் இருந்து கொண்டு இருக்கின்றது ” என்றார்.
பாப்புலர் ப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான்

அடுத்து உரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தனது உரையில் " நீதிக்கான முழக்கம் தமிழ்நாடு முதல் டெல்லி வரையிலும், ராஜஸ்தான் முதல் மணிப்பூர்வரையிலும் நடைபெற்று வருகின்றது. 20 ஆண்டுகளுக்கு முன் தெற்கே கேரளத்தில் துவங்கப்பட்ட இந்த இயக்கத்தின் கொடி இன்று டில்லியில் பறந்துகொண்டிருக்கின்றது. இன்று இயக்கத்தின் கொடி ராஜஸ்தான், மணிப்பூர், டெல்லி என இந்தியாவின்திசைகளெங்கும் பறந்து கொண்டிருக்கின்றது.
நம்முடைய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அனைவருக்கும் சமநீதி, சமஉரிமை என்பதை அனைத்துமக்களும் அனுபவிக்கும் விதமாக தொடங்கப்பட்டதே பாப்புலர் ஃப்ரண்ட். இன்றைய சுதந்திர இந்தியாவில் 65 ஆண்டுகளாக முஸ்லிம்கள் பொதுவாழ்வில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு அநீதிக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு பரிகாரம் காணத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகின்றது. ஆனால், இன்று பாப்புலர் ஃப்ரண்டுக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகின்றனர். ஆனால், அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் மக்களின் மனங்களில் குடி கொண்டுள்ளது. முஸ்லிம்கள் பெண்களை வெளியில் விடுவதில்லை. அவர்கள் அடுப்பங்கரையில்அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற போலி வசைகளை எல்லாம் தவிடு பொடியாக்கி இன்று கோவை முதல்ராஜஸ்தான் வரை ஆயிரக்கணக்கான பெண்கள் நீதியைத் தேடி போராட்டக்களத்திற்கு வந்துள்ளனர். 
ராஜஸ்தான், மணிப்பூர். தமிழ்நாடு, கர்நாடகா என முஸ்லிம் தாய்மார்கள் தங்களின் வாரிசுகளை நீதிக்கானபோராளிகாளாக உருவாக்கி வருகின்றனர். அவர்கள் புதிய சரித்திரம் படைத்து வருகின்றனர் என்பதற்கு இங்குகுழுமியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களே சாட்சியாகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவிலும் இதே போன்றதொரு காட்சியைத்தான் கண்டேன். மேற்கு வங்க கிராமங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் ஏழை மாணவர்களுக்கு இலவச டியூசன், கல்விஉதவி என சமூகத்துடன் இரண்டறக் கலந்து விட்டனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டு, வீட்டை விட்டு விரட்டப்பட்டு,வீடின்றி தவிக்கும் அகதிகளுக்கு நூற்றுக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள்உதவிக்கரம் நீட்டி அவர்களுடன் இருந்து அவர்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.
மேலும், டெல்லியிலும், உத்தர பிரதேசத்திலும் ஏழைகளுக்கு ரிக்ஷா மற்றும் தள்ளுவண்டிகள் கொடுத்து உதவிவருகின்றோம் பள்ளியில் இடைநிறுத்தம் செய்த மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காகஆயிரக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர்.இந்திய அளவில் கல்விக்காக இப்படியொரு செயல்திட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் தான் செயல்படுத்திவருகின்றது. அஸ்ஸாம் மக்களின் மறுவாழ்விற்காக நோன்புப் பெருநாளில் நாங்கள் செய்த வசூல் மக்களிடம்அமோக ஆதரவைப்பெற்றது.தமிழ்நாட்டில் 42 லட்சம் கேரளாவில் 64லட்சம் என மக்கள் வாரி வழங்கி தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்.
இயக்கத்திற்கான செலவினங்களை எங்கள் உறுப்பினர்கள் மாத மாதம் தரும் சந்தாவைக் கொண்டும் ரமலான்கலெக்ஷனைக் கொண்டும் ஈடுகட்டி வருகின்றோம். இருபது வருட இயக்க பயணத்தில் பணம் இல்லையென்றகாரணத்தினால் பணிகளை ஒருபோதும் நிறுத்தியது கிடையாது. ஏனெனில் எங்கள் உறுப்பினர்கள்ஒவ்வொருவரும் பல தியாகங்களை புரிந்து அவர்களுடைய வருமானங்களை எங்களுக்கு தந்து உதவிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், பாப்புலர் ஃப்ரண்டின் மீது களங்கம் விளைவிக்க வேண்டும் என திட்டமிடும்சக்திகள் இவர்களுக்கு நிதி எங்கிருந்து வருகின்றது என அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். கற்பனைகதைகளை உருவாக்கி வருகின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தேச விரோத இயக்கம் என்கின்றனர். அரசை விமர்சிப்பது ராஜதுரோகமல்ல. மாறாக, உண்மையான தேசதுரோகிகள் இன்று அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்கள் ஃபாசிஸ்டுகள் தான் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால், அவர்களை விட்டுவிட்டுஏராளமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை, தலித்களை, உரிமைக்காக போராடும் பழங்குடி மக்களை கைதுசெய்து சிறையில் வைத்து அழகு பார்க்கின்றனர்.இவர்களை கைது செய்ய (UAPA ) சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் என்ற காட்டுமிராண்டி சட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். அந்த சட்டம் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டமல்ல, மாறாக,சட்டவிரோதமான சட்டம் அது என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர் என்பதை அதிகாரத்தில்உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்கள் தமிழ்நாட்டில் சிறையில் வாடிவருகின்றனர். தமிழக அரசியல் கட்சிகள் இதனைப்பற்றி என்றைக்காவது சிந்தித்ததுண்டா? சிறைவாசிகளைபற்றி சிந்திக்காத அரசியல் கட்சிகளுக்கு இந்த மாநாட்டிற்கு வந்துள்ள மக்கள் கூட்டம் பாடங்களை கற்றுத்தரவேண்டும்.இறுதியாக, இந்தியாவில் நீதி நிலைபெற வேண்டும் அதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் அயராது பாடுபடும். பாப்புலர்ஃப்ரண்ட்டின் இந்த நீதிக்கான போராட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது " என்று கூறினார்.

பி.யு.சி.எல் துணை தலைவர் க.குறிஞ்சி


அடுத்து உரையாற்றிய பி.யூ.சி.எல்.லின் மாநில துணைத்தலைவர் க.குறிஞ்சி அவர்கள் தனது உரையில் "  மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கை இந்திய முஸ்லிம்களுடைய வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம் என்ற அரசியல்வாதிகளின் வாய்ஜாலங்களை தோலுரித்துக்காட்டியது. இந்தியாவில்திரைப்படம், ஊடகம் என்று அனைத்தும் உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுத்து வருகின்றன.மதவாத சக்திகள் நாட்டை துண்டாட முற்பட்டபோது தான் நாட்டில் அமைதியின்மை உருவானது. ஆனால்,வரலாற்றை நாம் திரும்பிப் பார்த்தால் மதச்சார்பற்ற தன்மைக்கு தீரன் திப்பு சுல்தான் முன்னுதாரணமாகதிகழ்ந்தார். ஒருமுறை ராஜாஜி இப்படிக் கூறினார், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிலை வைக்கவேண்டும் எனில் முதலில் திப்பு சுல்தானுக்கு தான் சிலை வைக்க வேண்டும் என்றார்.அந்தளவிற்கு முஸ்லிம்கள் இந்த சேதத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தனர். நாம் இந்த நீதிக்கான போராட்டத்தில்ஏற்படும் இடர்களை வீரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும். இந்தப்போராட்டத்தில் தலித்துகள், பழங்குடியினமக்கள் மற்றும் எங்களை போன்ற இந்துக்களும் உங்களோடு துணை நிற்போம் " என்றார்.

எஸ்.டிபி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் முபாரக்


அடுத்து உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் தனது உரையில் " முடியாததை முடியும் என்று செயல்படுத்திக் காட்டக்கூடிய ஆற்றல் மிக்க செயல்வீரர்களை கொண்டுள்ளதுபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்பதற்கு இந்த மாநாட்டு திடலே உதாரணம். அடாத மழையிலும் விடாது உழைத்து திடலை ஏற்பாடு செய்து மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கின்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்இந்தியாவின் இந்த ஆற்றல்தான் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கின்றது.அதிகார வர்க்கம் அடிமைகளை ஒருபோதும் எழுச்சி பெற விடமாட்டார்கள். அவை அனைத்தையும்தாண்டிதான் வரவேண்டும் என்பதை பாப்புலர் ஃப்ரண்டின் தொண்டர்கள் அறியாதவர்கள் அல்ல.தங்களின் உரிமைகளை காக்க இந்துக்களும்,கிறிஸ்துவர்களும், சீக்கியர்களும் ஒன்றுகூடி போராடுகின்றார்கள்.ஆனால், முஸ்லிம்கள் போராடினால் தீவிரவாதிகள் என்கிறார்கள்.முஸ்லிம்களை எதுவும் செய்யலாம் யாரும் கேட்க முடியாது என்கின்ற அரசியல்வாதிகளின் மனநிலைதான்இதற்கு காரணம். இதுதான் அவர்களை தவறு செய்ய வைக்கின்றது. சச்சார் முஸ்லிம்களின் அவலநிலையைப்பற்றி ஒரு அறிக்கை கொடுத்தும் இந்திய அரசாங்கம் ஒரு துரும்பைக்கூட அசைக்க தயாரில்லை.ஆனால், தேர்தல் வரும்போது 4.5 சதவீத இடஒதுக்கீடு தருகிறேன் என்று வாய்ஜாலம் காட்டுகின்றனர். அப்படி 4.5சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தாலும் அது நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுவிடும் என்பதை அவர்கள் அறிந்தே வைத்துள்ளனர். இனியும் இவர்கள் முஸ்லிம்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா அதனை ஒருபொழுதும் அனுமதியாது. முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு போராடினால் வெற்றி நிச்சயம் " என்றார்.

பாப்புலர் ப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ் . இஸ்மாயீல்


அடுத்துரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தனது உரையில் " நியாயத்தை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்விற்கு உறுதியான சாட்சியாக இருங்கள் என உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்தவனாக என்னுடைய உரையை துவங்குகின்றேன். பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியாவின் கொள்கைப் பிரகடனம் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் கோவையிலிருந்து தான்தொடங்கியது. நீதிக்கான முழக்கத்தின் மாநாடு கோவையிலிருந்துதான் துவங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
மிகவும் குறுகிய காலக்கட்டத்தில் திட்டமிட்டு இவ்வளவு பெரிய மாநாட்டை நடத்தி வருகின்றோம்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைப் பொறுத்தவரை 24 மணி நேரமும் ஏதாவது ஒரு ஊரில் ஏதாவது சமூகப்பணியை செய்து வரக்கூடிய மக்கள் இயக்கமாகும். நாங்களும் உறங்குவதில்லை. ஆதிக்க சக்திகளையும் உறங்கவிடுவதில்லை. காரணம் 65 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வரும் ஒரு சமூகத்தின் வேதனை எங்கள்நெஞ்சத்தில் ஆழப்பதிந்துள்ளது.தேசத்தந்தை காந்தியைக் கொலை செய்து பாபரி மசூதியை இடித்து கலவரங்கள், குண்டுவெடிப்புகள் எனநாட்டில் பிரளயத்தை உண்டு பண்ணியவர்கள் இன்று மத்தியிலும் மாநிலத்திலும் பதவிகளை அனுபவித்துவருகின்றனர். ஆனால், எந்த தவறும் செய்யாத அப்பாவி முஸ்லிம்கள் சிறைகளில் வாடி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கல்வி, அரசியல், பொருளாதாரம், சமூக மேம்பாடு என அனைத்திலும் முஸ்லிம் சமூகம்சமஉரிமை இல்லாமல் அடையாளத்தை இழந்து வாழ்ந்து வருகின்றது. இந்நிலை மாற வேண்டும் என்றவேட்கையில் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இடஒதுக்கீடு போராட்டம், சமூக மேம்பாட்டுத்துறை, கல்வி உதவி, ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம், சுய வேலைவாய்ப்புத் திட்டம், பேரிடர்மேலாண்மை என சமூகத்தை பலப்படுத்தி வருகின்றது. கிராமங்களை தத்தெடுத்து முழுக் கல்வியறிவு பெற்றகிராமமாக மாற்றுதல் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் என பாப்புலர் ஃப்ரண்ட்டின்செயல்திட்டங்கள் அதிகார வர்க்கத்தினருக்கு எரிச்சலை ஊட்டி வருகின்றது.
அதுமட்டுமல்லாது தலித், முஸ்லிம் ஒற்றுமையென சமூகங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை வெறுக்கும்ஆதிக்க சக்திகள் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்காக வேண்டிகுண்டுவெடிப்புகளிலும், தேசவிரோத செயல்களிலும் பாப்புலர் ஃப்ரண்டை தொடர்புபடுத்த முயன்றுவருகின்றனர்.
ஆனால் உண்மையில் பாசிச, இஸ்ரேலிய சியோனிச கூட்டணி தான் இதனை செய்து வருகின்றனர் என்பதும்தெரிந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. குண்டு வைப்பது காவி பயங்கரவாதி, கைதுசெய்யப்படுவது முஸ்லிம் அப்பாவி என தொடர்கின்றது இவர்களின் சதி. தமிழகத்திலும் கோவையில்இதுபோன்ற சதி அரங்கேற்றப்பட்டது. உளவுத்துறை ஏ.சி. ரத்தின சபாபதி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைகைது செய்து கோவையை தகர்க்க சதி என்றார். ஆனால், பாப்புலர் ஃப்ரண்டின் விடா முயற்சியினால் உண்மைஉலகுக்கு தெரிய வந்தது. ஆம்! குண்டை வைத்தது ரத்தின சபாபதி என்பதும் அவர்தான் குண்டுவெடிப்பு நாடகம்ஆடியுள்ளார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனாலும் என்ன பயன்? இன்றும் அவர் அதிகாரத்தைஅனுபவித்து கொண்டிருக்கின்றார். நாங்களும் விடுவதாக இல்லை. அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராகிகொண்டு இருக்கிறோம் என்றார்.
இறுதியாக நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது. இம்மாநாட்டில் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 

மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம்


மாநாடு குறித்து பத்திரிகையில் வந்த செய்தி