நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 22 பிப்ரவரி, 2012

வேண்டும் ஓர் அடையாள அட்டை!

அடையாள அட்டை விஷயத்தில் அசிரத்தையாய் இருக்க வேண்டாம்!!!
பெண்களுக்கு எங்கே போனாலும் பிரச்னைதான். வங்கிக்குச் சென்று ஒரு கணக்கு தொடங்கப்போனால்கூட. குருக்கள்பட்டி குருவம்மாள், பிரசவத்துக்குத் தயாராக இருக்கும் தனது மகள் பெயரில் ஒரு கணக்குத் தொடங்க வந்த இடத்தில்தான் இப்படியொரு சோதனை!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குருவம்மாளுக்கு கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடைத்ததால் வங்கியில் கணக்குத் தொடங்கச் சொன்னபோதும் இப்படித்தான் பிரச்னை ஏற்பட்டது. 



பிறகு எப்படியோ தக்கி, முக்கி கணக்குத் தொடங்கி விட்டாள். தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் ஆணுக்கோ, பெண்ணுக்கோ, வங்கிக்கணக்கின் மூலமாகவே பணமாற்றம் செய்யப்படுவதால் வங்கிக் கணக்கு என்பது அத்தியாவசியமாகிப் போய்விட்டது. குருவம்மாளுக்குக் கேட்ட மாதிரியே, வங்கி மேலாளர் அவளது மகளான செல்லத்தாயிடமும் கேட்டார்.
""உங்க கிட்டே ரேஷன் கார்டு இருக்கா?''
""இருக்குதுய்யா!''
"சரி! வாக்காளர் அடையாள அட்டை இருக்கா?'
""அதுவா.. அது எனக்கு இன்னும் கெடைக்கலியே... போட்டோ எடுக்க வந்த அன்னைக்கு மதினியாரு செத்துப்போனா... அங்கே போயிட்டேன். அதுக்குப்பெறகு போட்டோ எடுக்க வருவாகன்னு சொன்னாக. ஆளையும் காணோம்! தேளையும் காணோம்!''
""அப்ப டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?''
குருவம்மாள் கிழவியின் குடும்பத்திலேயே யாருக்கும் ஒரு ஓட்டைச்சைக்கிள் கூடக் கிடையாது.
செல்லத்தாய் திருதிருவென்று முழித்தாள்.
""ஓ.கே. அதுவும் இல்லையா? அப்படீன்னா "பான்' கார்டு இருக்கா?'
கிளை மேலாளர் தனது கடமை தவறாமல் வரிசைப்படி ஒவ்வொன்றாய் கேட்டார்.
அது செல்லத்தாயாய் இருந்தால் என்ன! செல்லப்பாவாக இருந்தால் என்ன!
"".... ? .... ? ....?''
""பாஸ்போர்ட் இருக்கா?''
"".... ? .... ? ....?''
குருவம்மாள் கிழவியும் சரி. செல்லத்தாயும் சரி. சங்கரன்கோவில் எல்லையைக் கூடத் தனது வாழ்நாளில் கடந்தது இல்லை. அவர்களுக்குப் பாஸ்போர்ட் என்றால் என்ன என்பதைப் புரிய வைக்க ஏழு நாள்கள் ஆனாலும் முடியாது!
""புகைப்படச்சான்று எதுவுமே இல்லாம அக்கவுண்ட் உங்களுக்குத் திறக்கவே முடியாதம்மா...!''
கிளை மேலாளர் கை விரித்துவிட்டார்.
செல்லத்தாயிக்கு எதுவுமே புரியவில்லை.
செல்லத்தாயிக்கு மட்டுமல்ல. பலருக்கும் இதெல்லாம் இப்ப புதுசா ஏன் கேட்கிறார்கள் என்பது புரியத்தான் இல்லை.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்த 2001 செப்டம்பர் 11-க்குப் பிறகுதான் இந்தப் பிரச்னை. கோபுரத்தைத் தகர்த்த தீவிரவாதிகள் பல மாதங்களுக்கு முன்பே அமெரிக்காவில் ஊடுருவியதாகவும், அவர்களுக்குப் பண உதவியெல்லாம் வங்கிக்கணக்கின் மூலம் பரிவர்த்தனை ஆனதாகவும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு தொடங்கப்பட்ட கணக்குகள் எல்லாமே போலி முகவரிகள் என்பதும் பின்னாளில் தெரியவந்தன.
எனவே உலக நாடுகள் முழுவதும் வங்கிக் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் மிகுந்த உஷாருடன் இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவால் தொடங்கப்பட்டதுதான் ஓவஇ என்று சொல்லப்படும் விதிமுறைகள்! எல்லா நாடுகளும் இதை அமல்படுத்தியே ஆக வேண்டும் என அன்பாய் மிரட்டல் விடுத்தது அமெரிக்கா!
இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்குக் கேட்கவா வேண்டும்? கண்ணை மூடிக்கொண்டு இந்த விதிமுறைகளைக் கறாராய் அமல்படுத்தத் தொடங்கின.
அது நம்ம ஊர் செல்லத்தாயி தலையிலா வந்து விடிய வேண்டும்? ஒவ்வொருவரும் புகைப்படச் சான்றும், இருப்பிடச் சான்றும் கட்டாயம் இணைக்க வேண்டும். இருப்பிடச் சான்றுக்கு ரேஷன் கார்டு கிட்டத்தட்ட எல்லோரிடமும் இருக்கும்.
புகைப்படச் சான்று என்று வரும்போது, வாக்காளர் அடையாள அட்டை என்பது மிக அவசியம். தற்போதைய இளம்பெண்கள் மற்றும் நடுத்தரக் குடும்ப யுவதிகள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதால் அவர்களால் டிரைவிங் லைசன்ஸ் வாங்க இயலும். செல்லத்தாயும், குருவம்மாளும் எங்கே போக?
ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவரின் படம் அச்சிடப்படுகிறது. (தவிர்க்க முடியாத சூழலில், கணவர் இல்லாத பெண்கள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவரின் மனைவியரது புகைப்படங்கள் குடும்ப அட்டையில் அச்சிடப்படுகின்றன) இதற்கு மாறாக,குடும்பத் தலைவரது புகைப்படத்தோடு, குடும்பத்தலைவியின் புகைப்படத்தையும் தமிழக அரசு அச்சிடலாம். இது சமூகத்தில் பெண்களுக்கு ஓரளவு மதிப்பையும் அந்தஸ்தையும் கொடுக்கும். நமது பிரச்னைக்கு ஓரளவு தீர்வாகவும் அமையும்.
18 வயது நிரம்பும் இளம்பெண்கள் உடனடியாய் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து வாங்குவது சாலச்சிறந்தது (ஓட்டுப் போடுறீங்களோ... இல்லியோ... அது வேற விஷயம்!)
ஒரு காலத்தில் வருமான வரிக் கணக்கு எண் வாங்குவது என்பது ஒரு சிலருக்கு மட்டுமானதாக இருந்தது. இப்போது மூன்று மாதக் குழந்தை கூட "பான்' நம்பர் வாங்கிச் சட்டையில் குத்திக் கொள்ளலாம். நூறு ரூபாய் செலவுக்குள் ஒரு புகைப்படச் சான்று என்பது பான் நம்பரில் மாத்திரமே சாத்தியம்!
தற்போது "ஆதார்' அட்டைகள் அளிக்கும் பணியை அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் விநியோகம் பண்ண ஆரம்பித்து, அதிலும் பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன. சிலருக்கு ஆதார் அட்டைகள் வீட்டில் வந்து சேர்ந்துள்ளன. கணவருக்கு வந்திருக்கிறது. மனைவிக்கு வரவில்லை. இரண்டு பேரும் ஒரே நேரத்தில் சேர்ந்துதான் எடுக்கப் போனார்கள் என்பதுதான் விசேஷம்! ஆதார் அட்டைகளைத் தொடர்ந்து அளிப்பதா வேண்டாமா என அரசுக்குத் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ! வாய்ப்புக் கிடைக்கும்போது உடனடியாக எந்தப் புகைப்படச் சான்றையும் எடுத்துப் பாதுகாத்துக் கொள்வதே உத்தமம்!
வாக்காளர் அடையாள அட்டையின் புகைப்படத்தைப் பார்த்து அலறியடித்துக் கொண்ட பெண்கள் பலருண்டு. என்ன செய்ய... அந்த லட்சணத்தில்தான் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அதன் முக்கியத்துவம் கருதி, அதைப் பாதுகாக்கத்தான் வேண்டியுள்ளது.
அடையாள அட்டை விஷயத்தில் அசிரத்தையாய் இருக்க வேண்டாம்! இல்லையேல்,குருவம்மாள் கிழவியின் ஒரே மகள் செல்லத்தாயிக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படலாம்!