நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 10 செப்டம்பர், 2011

அனைவருக்கும் அடையாள அட்டைகள்: முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்


சென்னை : முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இணையும் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க மாநில அளவில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டப் பேரவை விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை படித்த அறிக்கை:
"விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில், புதிய, விரிவுபடுத்தப்பட்ட, சமூக பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய திட்டம், ""முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்'' என்று அழைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ், 2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் முதலியவற்றை உடமையாகக் கொண்டு, அந்த நிலத்தில் நேரடியாகப் பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட குறு மற்றும் சிறு விவசாயிகள் பயன்பெறுவர்.
விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்துக்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரையுள்ள அனைத்து விவசாய குத்தகைதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள்.
எந்த நிறத்தில் அட்டை: ஒரு குடும்பத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபடும் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் பண்பேறிய சிவப்பு வண்ணத்திலும் (மெரூன்) அவர்களைச் சார்ந்து வாழும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சாம்பல் நிறத்திலும் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
இந்த அடையாள அட்டை பெறுபவர்கள் அனைவரும் அரசின் திட்ட உதவிகளைப் பெறத் தகுதி உடையவர்கள். இதுவரை குடும்பத் தலைவருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்த நிலை மாறி புதிய உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுவதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் திட்ட உதவிகளைப் பெற வழி ஏற்படும்.
கல்வி உதவி: விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வேறு எந்த கல்வி உதவித் திட்டத்தின்கீழ் உதவி பெற்றாலும், இந்தத் திட்டத்தின் கீழும் கல்வி உதவித் தொகை பெற வழி செய்யப்பட்டுள்ளது.
ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் இதர பட்டயப் படிப்புகளுக்கு ரூ.1,250 முதல் ரூ.1,950 வரை ஆண்டுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு ரூ.1,750 முதல் ரூ.2,500 வரை ஆண்டுக்க கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். முதுகலை பட்டப் படிப்புகளுக்கு ரூ.2,250 முதல் ரூ.3,750 ஆண்டுக்கு வழங்கப்படும். சட்டம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல் போன்ற தொழில் கல்வி படிப்புகளுக்கு இளங்கலையில் ரூ.2,250 முதல் ரூ.4,750 வரையிலும், முதுகலையில் ரூ.4,250 முதல் ரூ.6,750 வரையிலும் ஆண்டுக்கு கல்வித் உதவித் தொகையாக அளிக்கப்படும்.
திருமண உதவி: சமூகநலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற தகுதி உள்ளவர்கள் அந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவர். திருமண உதவி திட்டங்களின் கீழ் உதவித் தொகை பெற இயலாதவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், ஆணுக்கு ரூ.8 ஆயிரமும், பெண்ணுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
மகப்பேறு உதவித் தொகை-முதியோர் ஓய்வூதியம்: பதிவுபெற்ற உறுப்பினருக்கு சுகாதாரத் துறையால் மகப்பேறு உதவிக்கென செயல்படுத்தப்படும் திட்டத்தின் மூலம் இந்த உதவித் தொகை வழங்கப்படும். மகப்பேறு உதவித் தொகையினை எளிதாகப் பெறும்வகையில் தனி வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மூலம் தேவையான சான்றிதழ்களை ஒருமுகப்படுத்தி வழங்க இந்தத் திட்டத்தின் கீழ் வசதிகள் செய்து தரப்படும்.
60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மாதத்துக்கு ரூ.1,000 ஓய்வூதியமாகப் பெறுவர். இந்தத் திட்டத்தின் உறுப்பினரோ அல்லது அவரைச் சார்ந்தவரோ இறக்க நேரிட்டால் அந்தக் குடும்பத்துக்கு ஈமச் சடங்குக்கான உதவித் தொகை உடனடியாக வழங்கப்படும். ஈமச் சடங்கு நிவாரணம் பெற இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படுகிறது.
திட்டச் செயலாக்கம்: ""முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்'' மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மூலமாகச் செயல்படுத்தப்படும்.திட்டச் செயல்பாட்டினை மேற்பார்வையிட அரசு அளவில் ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்படும்' என்றார் முதல்வர் ஜெயலலிதா.