மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்!
அல்லாஹ் கூறுகிறான்: -
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35)
மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது. நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும் அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் மரணவேளை என்பது தவிர்க்க முடியாததாகும். எனவே இந்த உலகவாழ்வின் இறுதிக் கட்டமான அந்த மரணத்தின் நேரம் மற்றும் மண்ணறைகளில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றியும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நாம் அமல்கள் செய்வதற்குரிய கால, நேரங்கள் எல்லாம் நாம் உயிருடன் இருக்கும் போது தான். மரணம் நம்மை வந்தடைந்தவுடன் நம்முடைய நன்மை தீமை பதிவேடுகள் மூடப்படும். ஆகவே நல்ல அமல்கள் செய்வதற்கு இதுதான் நேரமாகும்.










